சிந்தனைச் சிதறல் - தமிழ்ப்பிரியன்

அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை!

Friday, June 13, 2008

அறிவு

அறியும் பொருளில் தொடங்கு மிதனை
அறிந்திடும் யுக்தியு முண்டு- அறிவிற்கே
கட்டவிழ்த்து எங்கோ ஓடும் மனதை
கட்டுக்குள் பூட்டு மறிவு


இலக்கணம்: நேரிசை வெண்பா...

வெண்பா படித்த பின்னர் புதுக்கவிதையைப் படியுங்கள்...நன்றி..

---------------
அறியும் பொருளின்
ஆரம்பம் !

அறிவின் மிகுதியை
அளவிடும் கருவி
அறிவிற்கே உண்டு,
அறிஞன் என்றும்
அறிவிலி என்றும்
அகிலம் விதவிதமாய்
அகம் மகிழ பெயர் சூட்டும்

தேடலில் தொடங்கும்
தேவையில் விழிக்கும்
கேள்வியில் சிறக்கும்
சிந்தனையில் வளரும்
ஆக்கத்தில் ஒளிரும்
அறியாமையில் தூங்கும்

கட்டவிழ்த்து ஓடும் மனதை
கட்டுக்குள் ஒடுக்கும் கருவி
விலங்காய் திரிந்தவனை
மனிதனாய் வளர உதவியதும்
மனிதனாய் மாறியவனை
விலங்கினைப் போல்
மங்கச் செய்வதுமறிவு

அள்ளிக் கொடுப்பினும்
தேடித் தேடி எடுப்பினும்
குறையாது பெருகும்...

தெரியாத பொருள் ஆயினும்
தெரியப்படுத்தும் பொருள்
ஆதாரம் தேடுவார்க்கும்
ஆதாரமான பொருள்

Sunday, June 08, 2008

படம் இங்கே...கவிதை எங்கே



எதுவும் இசை தானம்மா
நீ சொல்லும் மொளனமும்
என் அழகிய சப்தமும்
*****
சப்தத்திற்கும் மொளனத்திற்கும்
இடைவேளை விரலளவோ?
*****

உங்களூக்கு தோன்றுவதை கருத்தில் எழுதுங்க..! நன்றி..

Labels:

Saturday, June 07, 2008

தூரம் இங்கெதுவும் இல்லை...












கடினம் என்று நினையாமல்
முடியும் என்று எண்ணினால்
இமயமும் ஏறும் தூரம் தானே
வழியில் கண்ட
கல்லும் முள்ளும்
தனி ஒரு சுகம் என்று...
கடந்தவன் மட்டுமே அறிவான்!

கடந்த பாதை
சுகமான கதை
கடக்கப்போகும் பாதை
சாதனைக்கு வழியன்றோ..
ஆமைப் போல் நகர்ந்தாலும்
இலக்கில் உறுதி
வெற்றிக்கு சான்றன்றோ..

முயல்..மலையாதே
நகர்...நிக்காதே
பயணம் இது...பயணி...

எண்ணமே வாழ்வின் பிரதிபலிப்பு
மண்ணில் மழை சேரும் போது,
தூரம் இங்கெதுவும் இல்லை...
பாரம் என்றெதுவும் இல்லை...

Labels:

Friday, June 06, 2008

கடவுள்

------------
ஒரு பெயர்,
எத்தனை பரிணாமம்
ஒரு பொருள்,
எத்தனை விளக்கம்

நாத்திகனுக்கு கேள்விக்குறி?
ஆத்திகனுக்கு ஆச்சிரியக்குறி!

வெளியில் எங்கும் இல்லாதவன்
ஆனால் எதிலும் நிறைந்தவன்
உன்னிலும்!
என்னிலும்!
அன்பில் தெரியும்,
பரிவில் புரியும்.

மீண்டும் புதிதாய்
குறைகள் தீர்க்க நாடுவார்
இன்னும் கோடி
ஆசைகள் நிறைவேற வேண்டுவார்
பழியும் புகழும்
தினமும் ஒரு தினுசாய்

இன்று மதத்தால்
இறந்த கடவுள்
மனிதத்தால் மட்டும்
மீண்டு(ம்) மண்ணில் பிறக்கிறான்...

காலமும் கடவுளும்
காணக் கிடைக்காது
உணர்ந்தவருக்கு மட்டும்
இது பொக்கிஷம்...

மொத்தத்தில்
புரியாத புதிர்..
தெரியாத விடை

விளக்கி சொல்ல
நான் அறிஞனும் இல்லை
விளக்கம் சொல்ல
நான் கடவுளும் இல்லை

- தமிழ்ப்பிரியன்

Labels:

Sunday, May 25, 2008

ஆசிரியப்பா - மரபுக் கவிதை முயற்சி

ஆசிரியப்பா அல்லது அகவல் என்றும் அழைப்பார்கள்..பசுபதி அய்யா அவர்களின் கவிதை இயற்றிக் கலக்கு பகுதியில் இருந்து விதிகள் படித்து நான் முயற்சி செய்தவை இதோ..

தமிழ்
------
வெற்றி முரசு உரக்க ஒலிக்க
வற்றா நதியாய் தரணியில் சிறந்து
வாழும் எங்கள் அழகுத் தமிழே
வாழிய என்றும் வளம்பெரு கவே..

(இலக்கணம் - நிலை மண்டில ஆசிரியப்பா)

கடல்
-------
கருணை பொழியும் அமிர்த மழையும்
பொறுமை காத்து மிளிரும் முத்தும்
ஆசை மனதை பாயும் அலையும்
இறையின் பொருளை நடுக்கடலின் அமைதியும்
சற்றுப் பார்த்தால்! உற்றுப் பார்த்தால்
ஆழக் கடலும் வாழ்வில்
அழகாய் கற்றுக் கொடுக்கும் ஆயிரமே

(இலக்கணம் - நேரிசை ஆசிரியப்பா)

கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

Labels: ,

Saturday, May 24, 2008

வெண்பா - மரபுக் கவிதை முயற்சி

இணையத்தில் இதைப் பார்த்தேன்..ஈற்றடி "மண்ணுலகில் இன்ப மயம்" ஒன்றை கொடுத்து விட்டார்கள் இதற்கு வெண்பா வடிக்க சொல்லி இருந்தார்கள்...என் முயற்சி இதோ

நேரிசை வெண்பா

தத்தித் தவழும் மழலையரின் பேச்சும்
ததும்பும் தமிழின் சுவையோடு - தித்திக்கும்
பண்ணும் இறையும் இயற்கையும் என்றென்றும்
மண்ணுலகில் இன்ப மயம்


நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.. மதம் என்ற விசயம் எப்போதும் உப்பு போல, அதிகமாக இருந்தால் சாப்பிட முடியாது..போடாமல் அல்லது மறந்து விட்டால் சாப்பிடவே முடியாது..(என் தோழன் ஒருவனின் தாயார் சொல்லியது!) எவ்வளவு உண்மை.இதை வைத்து என் குறள் வெண்பா முயற்சி..

குறள் வெண்பா
மதமென்று மாந்தர் மதமாகின் மண்ணில்
மலராது வாடும் மனம்

கருத்துக்களை பதியுங்கள்..நன்றி..

Labels: , ,

Wednesday, May 21, 2008

எண்ணங்கள்

எண்ணில் எண்ணி முடியாது
  எழுத்தில் வடித்தும் தீராது..
அகன்ற விண்ணிலும் அடங்காது
  ஆழ் கடலிலும் தாழாது
ஒலியை விடவும் வேகமாய்
  ஓடி உளையும் மனதில்,
உதிக்கும் ஆயிரம் எண்ணங்கள்
  உயிர்க்கும் அழகு வண்ணங்கள்
இது போல் விந்தை
  இதுவரை எங்கு கண்டீர்?

-தமிழ்ப்பிரியன்

Labels:

Sunday, May 11, 2008

என் முதல் வெண்பா


ஆசை அறுத்தால் தெளிவு பிறக்குமாம்
ஆடை துறந்த முனிவரும் பாடினார்
ஆசை மறந்தவர் புத்தனும் சாடினன்
ஆயினும் வாடுவார் காண்


சிறு வரலாறு:

வெண்பா எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குள் அதிகமாக..அதற்கான தேடலில் இறங்கினேன்..விக்கி பசங்க, முத்தமிழ் மன்றம் போன்ற தடங்களில் கூகுள் என்னை கால் வைக்கச் செய்தது..என் முயற்சியிலும் விளைந்தது ஒரு வெண்பா..அதைச் சரிப்பார்க்க முனைவர்.வாசுதேவன் ஐயா அவர்களிடம் மின்னஞ்சல் அனுப்பி..அவர் சரி என்று சொன்ன பிறகு அதை அனைவரும் பார்க்கும் படி பதிய வைப்பதில் எனக்கு ஒரு சின்ன சநதோசம்..இன்னும் நிறைய கத்துக்கனும், படைக்கனும்ங்கற ஆர்வமும்...
உதவி செய்த அனைவருக்கும் என் நன்றிகள்!

உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்...!

Labels:

Monday, March 31, 2008

ஜோதிடம்..


கலை என்பார் சிலர்,
அறிவியல் என்பார் சிலர் - சுத்த
அறிவிலி என்பார் சிலர்...

சுக்ரனோ உச்சத்தில்,
சனியோ வக்ரத்தில்.. - சில
கோள்க‌ள் காட்டி
கோள் மூட்டுவார்..

நடக்காவிட்டால் ஜாதகம்
காரண‌ம் என்பார்..
நடந்தேவிட்டால் அதையும்
சாதக‌மாய் கூறுவார்..
இதை நம்பிக் கெட்டவரும் உண்டு,
வாழ்ந்தவரும் உண்டு..

மெய்யோ..,
பொய்யோ
நான் அறியேன்..
ஒன்றை ம‌ட்டும
ந‌ன்று அறிவேன்..
என் செய‌லுக்கு நானே பொறுப்பு
மெய்ய‌ப்பா...
உன் செய‌லுக்கும் நீயே பொறுப்பு..

- த‌மிழ்ப்பிரிய‌ன்

Labels: ,

Sunday, March 30, 2008

நல்ல தமிழ் மட்டும் பேசடா..





மண் பானை சோறும்,
திண்ணை உறக்கமும்
ஆற்று குளியலும்...
நகர வாழ்க்கையில்
அழிந்து விட்ட போதிலும்..
பாட்டிச் சொன்ன கதைகளும்
கில்லி, கோலி
கூழாங்கல் ஆட்டங்களும்,
மாயமாகி விட்ட போதிலும்..

கால நாகரிகம் என்ற பெயரில்,
வள்ளுவனும், கம்பனும், பாரதியும்,
அள்ளி் அள்ளித் தந்த
அழியா அமிர்தமாய் ,
செம்மொழி்யாம்- நம்
தாய்மொழி அழகுத் தமிழை
மட்டுமாவது மறந்துவிடாதே
என் செல்ல‌மே!
கலப்பில்லாத நல்ல தமிழ்
மட்டும் பேசடா..
என் அறிவுச் செல்வ‌மே!

- தமிழ்ப்பிரியன்

Labels: , ,

Tuesday, March 25, 2008

எனக்குத் தான் வயசாகி போச்சா?

சிகப்பு நிற‌
கட்டபொம்மன் பேரூந்துகளும்,
இளம் நீல நிற‌
நேசமணி பேரூந்துகளும்...
மறந்து தானே போச்சு!



75 காசு தபாலில்,
அடித்து அடித்து எழுதி..
அழகாய் மடித்து,
வாயால் பசை தடவி...
கடிதம் அனுப்பிய
காலங்கள் ஓடித்தானே போச்சு.!





சரோஜ் நாராயண்சாமி குரலில்
அகில இந்திய வானொலியில்
தினமும் ஒலித்த செய்திகளும்,
சென்னை தொலைகாட்சியில்
பவனி வந்த,
"வயலும் வாழ்வும்" நிகழ்ச்சிகளும்
தீடிரென்று,
அந்தக் காலம் ஆகி போச்சா?
இல்லை,
எனக்குத் தான் வயசாகி போச்சா?

Labels:

Monday, February 05, 2007

இரவு

ங்கும் இருட்டின் நிறமே தொற்ற,
எதிலும் நிசப்தமே நிலவ,
நிலவும் இல்லாத,
நட்சத்திரம் சிரிக்காத
இருள் சூழ்ந்த
இரவு நேரம் அது. !
தூங்கும் உலகினை
சத்தமே இல்லாமல்
இருள் சூழ்ந்த
இரவு நேரம் அது. !

உலகம் இயங்காமல் போனதோ? என்ற
சந்தேகமும் என்னுள் வந்தது...
எதையோ சொல்ல காத்திருந்ததாய் மட்டும்
எனக்குள் ஆழமாய்த் தோன்ற...

மேகங்கள் உடைத்து,
மூடுபனி கிழித்து,
முதல் கதிர் வீச்சு,
மண்ணில் விழும் போது
புல்லினம் பறக்க,
புல்வெளிகள் சிலிர்க்க,
புது நாள்..புது நம்பிக்கை என்று
உலகம் விடியலை நோக்கி
உற்சாகமாய் உதயமாக...

மாற்றங்கள் ஒன்றைத் தவிர..
மற்றவை எதுவும் இங்கு
முற்றிலும் நிலையில்லை என்று
மரணித்த இரவு சொல்லாமல் சொல்லியது...

-தமிழ்ப்பிரியன்.

Labels:

Wednesday, January 31, 2007

சூசூ...சூசூ...சூப்பர்மேன்

சூப்பர்மேன் எல்லாத்துக்கும் தெரியும்...இந்த பேண்ட் மேல ஜட்டி போட்டுட்டு...பறந்து பறந்து போவாரே..ஆனா இந்த சூப்பர்மேன் எல்லாரும் பார்த்து இருக்க மாட்டீங்க....


கீழே படம் தெரியாவிட்டால், இந்த சுட்டியில் பார்க்கவும்

இந்த படத்தில் கதாநாயகனாக ந்டித்தவர் : என்.டி.ஆர்.
கதாநாயகி: ஜெயப்பிரதா
படம்: சூப்பர்மேன்..

என்ன கொடுமை சரவணா இது...

ஜெயப்பிரதா இந்த படத்தை இன்று பார்த்தால் கண்டிப்பாக வருத்த்ப்படுவார்...

Monday, December 25, 2006

Pursuit of HappYness



பர்ஸ்யூட் ஆஃப் ஹாப்பினஸ்.

இந்த படம் ஆரம்பிக்கும் முன்ன்ரே நம் கண்களை கவர்வது..ஹாப்பினஸ் என்பதன் ஸ்பெல்லிங். "I" பதிலாக "Y" போடபட்டுள்ளது..இதற்கான விளக்கம் படத்தின் சில காட்சிகளிலேயே காண்பித்து விடுகிறார் டைரக்டர்.

படத்தைப் பற்றி கூறுவதற்கு முன், படத்தின் சிறப்பம்சம், கோல்டன் குலோப் விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு வில் ஸ்மித் நாமினேட் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாது, வில் ஸ்மித்தின் சொந்த மகன் இந்த படத்தில் வில் ஸ்மித்தின் மகனாக நடித்து உள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?..சுட்டிப் பையன் அருமையாக நடித்து இருக்கிறான்.

படத்தின் கதாநாயகன் வில் ஸ்மித் ஒரு சாதரான மெடிக்கல் சேல்ஸ்மேன்.தன் குடும்பத்தை காபாற்ற தன்னால் முடிந்த வரை போராடுகிறார். பண நெருக்கடி குடும்பத்தில் குழப்ப்த்தை ஏற்படுத்த,மனைவி தன்னை பிரிந்து சென்றாலும் மகனை விட்டு கொடுக்காமல் தன்னுடன் வைத்துக் கொள்கிறார்..இந்த சமயத்தில் தான் அவருக்கு ஒரு சம்பளம் இல்லாத இன்டர்ன்ஷிப் வாய்ப்பு ஒரு மிகப் பெரிய‌ பங்குச் சந்தை நிறுவனத்தில் கிடைக்கிறது...20 பேரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் அந்த நிறுவந்த்தில் முழு நேர பணியில் எப்படியும் நுழைந்து விட வேண்டும் என்று போராடுகிறார்..படம் முழுவதும் இந்த போராட்டம் தொடர்கிறது..சம்பளம் இல்லாத பணியில் இருக்கும் இவருக்கு இருக்க இடம் இல்லை, பணத்திற்கு என்ன செய்கிறார்? தன் 5 வயது மகனை வைத்துக் கொண்டு எப்படி இந்த நெருக்கடியை சமாளிக்கிறார்.முன்னுக்கு வருவாரா? என்பதே கதை...இது என்ன, சாதாரண ரெகுலர் சினிமா கதை மாதிரி தானே என்று நினைப்பவர்களுக்கு...அது தான் இல்லை! பல ஆங்கிலத் திரைப்படங்கள் உண்மைக் கதைகளை மூலமாய் வைத்து வரும் என்பது பலரும் அறிந்ததே..அந்த வரிசையில் இதுவும் ஒன்று...நான் எல்லாத்தையும் சொல்வதை விட நீங்களும் படத்தைப் பார்த்தால் நல்லா இருக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.



"சந்தோஷம் என்பது நாம் எப்போதும் தேடி அலைவது தான்.அதை நாம் நிரந்தரமாக தக்க வைப்பது என்பது இயலாத ஓன்று. எப்படி முயன்றாலும்." ‍ இது தான் படத்தின் மூலக் கரு, பெயர் காரணம் கூட‌.

ப‌ட‌ம் மிக‌வும் மெதுவாய் ந‌க‌ர்கிற‌து ..ஆனால் க‌ண்டிப்பாக‌ அதை நாம் உண‌ராத‌ வ‌ண்ண‌ம் எடுத்து இருப்ப‌து திறமை. சில பல அருமையான காட்சிகளில் நம்மை உருக வைத்து இருக்கிறார் வில் ஸ்மித். நடிப்பில் கலக்கி இருக்கிறார்..சும்மா சொல்லக் கூடாது மனுசன் நடிப்புல பிச்சிபுட்டார்.! படத்தின் முழு கவ‌ன‌ம் வில்ஸ்மித் மீதும், அவ‌ர் ம‌க‌ன் மீதுமே இருக்கிற‌து. ஆக்ஷ்ன், காமெடி என்று க‌ல‌க்கிய‌ வில் இந்த‌ முறை க‌ஷ்ட‌மான‌ க‌தாபாத்திர‌த்தை நேர்த்தியாக‌ கையான்டுள்ளார். ஆபாச காட்சிகளோ, ஆபாச வார்த்தைகளோ இல்லாமல் இருக்கும் இந்த படம் எல்லாரும் பார்க்கலாம்..

க‌ண்டிப்பாக‌ பார்க்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம்.! பர்ஸ்யுட் ஆஃப் ஹாப்பினஸ்‍ - முழுமை.!

பி.கு: மக்களே இது தான் என் முதல் திரை விமர்சனம். படத்தைப் பற்றி மேலும் விபரம் அறிய, இங்கே கிளிக்கவும்

Monday, December 04, 2006

வாழ்க்கை


வார்த்தைகள் வராமல் தவித்தப்படி..
மனதில் ஆயிரம் எண்ண்ங்கள்!
ஆரம்பமும் முடிவுகளும் முடிவெடுக்காமல்!
எதையோ தேடி,
எங்கேயோ ஓடும் வாழ்க்கையில்..
வாழ்க்கை என்னை கடந்து விடாது,
நானும் ஓடுகிறேன்.!
இப்போது நிறுத்த முடியாது,
பாதியில் விட்டால் வலி தெரியாது..
ஆனால்,
வலி உணராத வெற்றி ஏது!
பறந்து பார், முடியாதென்றால்
நடந்து பழகு..
நிற்கவும் முடியாமல்
கீழே விழுந்தால்..!
தவழ்ந்து விடு..
இன்றே நீ துவங்கி விடு!
வாழ்க்கையை இரண்டு கை விரித்து,
வாழ்ந்து பார்..
மழையை அனுபவிக்க,
கொஞ்சம் நீ
நனைந்து பார்..!

Labels: